கொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்? - நீதிமன்றம் கேள்வி
உச்சநீதிமன்றம் வழக்கின் சாட்சிகளை பாதுகாப்பது தொடர்பாக பிறப்பித்த வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என தமிழக உள்துறை செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் இரட்டைக்கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,"கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்கிற ராமர், கோயில் பூசாரி. மனைவி தாமரை. இவர்களுக்கு திருமணமாகாத இரு மகள்கள் உள்ளனர். இவரது மகன் வண்டு என்கிற நல்லதம்பி. நல்லதம்பியின் மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான, 196 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த குளம் ஒன்றை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், 157 ஏக்கர் குளத்தை பட்டா போட்டு ஆக்கிரமித்துள்ளனர். தற்பொழுது அந்த குளத்தில் மீதமுள்ள 39 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வீரமலை, நல்லத்தம்பி ஆகியோர் அளித்த தகவலால்தான் தொடுக்கப்பட்டதாக ஆக்கிரமிப்பாளர்கள் இருவர் மீதும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வாரம் தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினரோடு சம்பந்தப்பட்ட குளத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, வீரமலை, அவர் மகன் நல்லதம்பி ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு இடத்தின் எல்லைப் பகுதிகளை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 29 காலை நல்லதம்பி தோட்டத்தில் பறித்த பூக்களை திருச்சி மார்க்கெட்டில் சென்று விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, முதலைப்பட்டி அருகே, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி உயிரிழந்தார். பேரனை பள்ளிக்கு விடச்சென்ற வீரமலையையும் வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பேரன் பொன்னாரையும் கொலை செய்ய முயன்றபோது அவர் அங்கிருந்து ஓடி உயிர் தப்பியுள்ளார்.
பொதுநல வழக்கிற்கு உதவியதற்காக கொலை செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது. ஆகையால் நடந்தவற்றை கருத்தில் கொண்டு, கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையாளிகளை அடையாளம் தெரிந்த சிறுவன் பொன்னரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், கொலையானவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பினை வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, வழக்கில் சாட்சியான சிறுவன் பொன்னரின் பாதுகாப்பு கருதி மாணவர் தற்போது பயிலும் பள்ளியின் வேறு கிளைக்கு மாற்ற இயலுமா? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழக்கின் சாட்சிகளை பாதுகாப்பது தொடர்பாக பிறப்பித்த வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், கரூர், முதலைப்பட்டி குளம் இருக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் கரூர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற் வேண்டுமென உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.