நடுரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை ஆசுவாசப்படுத்திய ஆட்சியர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நடுரோட்டில் மயங்கிய முதியவரை மாவட்ட ஆட்சியர் தூக்கிச்சென்று ஆசுவாசப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய கரூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சென்று கொண்டிருந்தார். குளித்தலை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, சாலையில் நடுவே 70 வயது முதியவர் ஒருவர் மயங்கி விழுந்ததை ஆட்சியர் கண்டார். முதியவரை தூக்குவதற்கு போக்குவரத்து காவலர் ஒருவர் முயன்று கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி இறங்கி, போக்குவரத்து காவலருடன் இணைந்து முதியவரை தூக்கிச் சென்று அருகில் இருந்த டீக்கடையில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர் 108 அவசர ஊர்தியை வரவழைத்து முதியவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
முதியவரின் குடும்ப நிலை குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு குளித்தலை வட்டாட்சியருக்கு உத்தரவிட்ட ஆட்சியர், தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த மனித நேய செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.