கருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி

கருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி

கருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி
Published on

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இதில், கனிமொழி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதேசாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பேரணி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த விழாவில் கலந்துகொண்டு சிலையை திறந்துவைக்கிறார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 

பின்னர் சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்புவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். விழாவின் நிறைவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றியுரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் நடைபெறும் அமைதி பேரணி மற்றும் சிலை திறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com