கருணாநிதியின் விசுவாசிகள் என் பக்கமே இருக்கிறார்கள் ! மு.க.அழகிரி
திமுக தலைவர் கருணாநிதியின் விசுவாசிகள் தன் பக்கமே இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மத்திய முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி இன்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கருணாநிதியின் அனைத்து விசுவாசிகளும் தன் பக்கமே உள்ளதாக தெரிவித்தார். காலம்தான் இதற்கு பதில் சொல்லும் எனக் கூறிய அழகிரி, தன் தந்தையிடம் கட்சி தொடர்பான தன் ஆதங்கத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “நான் திமுகவில் தற்போது இல்லை. எனவே திமுக செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது” என்றார்.
திமுகவின் அவசர செயற்குழு நாளை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் விசுவாசிகள் தன் பக்கமே உள்ளார்கள் என மு.க.அழகிரி தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.