திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன்; நலமாக இருக்கிறார்: முதலமைச்சர் பழனிசாமி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை தான் நேரில் பார்த்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இதனிடையே பல முறை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் நேற்று லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இருப்பினும் இன்று காலை முதல் இருந்து காவேரி மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை நான், துணை முதலமைச்சர் ஓபிஎஸ், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேரடியாக பார்த்தோம். அவர் நலமுடன் உள்ளார். மருத்துவக் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்றார்.