திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபத்தன்று தீப தரிசனம் காணவரும் பக்தர்களும், பொதுமக்களும் தீபம் எரியும் மலை மீது ஏற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. அப்போது 20 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். அவர்கள் சிரமமின்றி வந்து தீப தரிசனம் செய்து விட்டு செல்லுவதற்கு ஏற்ற வகையில் மாவட்ட நிர்வாகம் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தீப தரிசனம் காணவரும் பக்தர்களும், பொதுமக்களும் தீபம் எரியும் மலை மீது ஏற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தீபம் ஏற்றப்படும் மலை மீது பொதுமக்கள் ஏற தடைவிதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கார்த்திகை தீபத்தன்று ஆங்காங்கு யாரும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார். அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் அதற்கான தொகையை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பான முறையில் அன்னதானம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.