தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 12,000 கனஅடி நீர்.. 15 நாட்களுக்கு திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!
காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 12,000 கனஅடி காவிரி நீர் விட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த கூட்டங்களில் இரு மாநிலங்களும் தங்கள் தரப்பை வலியுறுத்தின.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 12ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்கள்,நாளொன்றுக்கு 12 ஆயிரம் கனஅடி நீரைதிறந்துவிட, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.
இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பும், தமிழ்நாடு அரசு தரப்பும் வாதங்களை முன்வைத்தன. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிசெய்தது.

