ஹைதராபாத்திலிருந்து நடைப்பயணமாகப் புறப்பட்ட தமிழக மாணவர்கள் - சொந்த ஊர் சேர்ந்த கதை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஷாஜி மற்றும் மெர்லின்ராஜ் ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கிப் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தக் கடந்த மாதம் 24ஆம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், அம்மாணவர்கள் பயின்ற கல்லூரியும் மூடப்பட்டது.
இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி வரை மாணவர்கள் அங்கேயே தங்கி இருந்த நிலையில், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்திலிருந்து நடைப்பயணமாகக் கிளம்பிய அவர்கள், வழியில் வரும் லாரிகள் மூலம் தமிழகம் நோக்கி வந்துள்ளனர். முதற்கட்டமாகக் கிருஷ்ணகிரி வரை லாரியில் வந்து, அங்கிருந்து மற்றொரு லாரி மூலம் நாமக்கல்லுக்கு வந்தனர்.
நாமக்கல்லிலிருந்து மதுரையை நோக்கி நடந்து சென்ற மாணவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கு உணவளித்து, தங்க இடமும் வழங்கி முட்டை லாரி மூலம் சொந்த ஊருக்குச் செல்ல நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்மூலம் இருவரும் சொந்த ஊர் சென்றனர்.