பெற்றோரின் தவறால் தடையான திருமணம் - புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு !
கன்னியாகுமரியில் மணவறை சென்ற திருமணம் நிறுத்தப்பட்டதால், மனமுடைந்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாறவிளை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பினு (31). இவருக்கு நீண்ட வருடங்களாக முயற்சி செய்தும் திருமணம் நடைபெறமால் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தக்கலை அருகே கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்த அபிஷா என்ற பெண்ணை பார்த்துள்ளனர். இரண்டு வீட்டு பெற்றோர்களுக்கும் ஒத்துப்போக, திருமணம் முடிவாகியுள்ளது. அதன்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மண்டைக்காடு அருகே உள்ள ஆலயத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.
புதுமாப்பிள்ளை, மணமகள் என அனைவரும் மணவறைக்கு வந்தனர். சொந்தம், பந்தம் என ஏராளமானோர் கூடியிருந்துள்ளனர். திருமணம் நடைபெறும் நிலையில், சினிமாவில் வருவதுபோல சிலர் வந்து திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஏன்? என்று பதறிய இரு வீட்டாரும், விஷயத்தை கேட்டுள்ளனர். அப்போது திருமணத்தை நிறுத்தச் சொன்னவர்கள், தங்கள் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர். அத்துடன் மணப்பெண்ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என தங்களுக்கு புகார் வந்ததாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் மணப்பெண் வீட்டாரிடம், பெண்ணின் வயதுக்கு ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் திருமண வயது பூர்த்தியடைந்ததற்கான ஆவணங்களை சமர்பிக்கவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டு, மணப்பெண் அழைத்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் பெண்ணின் குடும்பத்தார் மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தார் மனமுடைந்தனர். அதுமட்டுமின்றி மாப்பிள்ளை பினு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் பின்னர் மணப்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் மாப்பிள்ளை பினுவின் மனதில் ஆழமாக பதிந்து மன விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவு சோகத்துடன் தூங்கிய பினு, நடு இரவில் மனமுடைந்த நிலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளார். விடிந்ததும் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட குடும்பத்தினர், அழுது புலம்பியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பினு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வயதை அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்ய முயன்று பெற்றோர்கள் செய்த தவறால், ஒரு உயிர் பலியாகியிருப்பது வருந்தத்தக்க சம்பவம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)