கன்னியாகுமரி: சூறைக் காற்றுடன் மழை; கடலுக்குச் செல்லாத மீனவர்கள்..!

கன்னியாகுமரி: சூறைக் காற்றுடன் மழை; கடலுக்குச் செல்லாத மீனவர்கள்..!
கன்னியாகுமரி: சூறைக் காற்றுடன் மழை; கடலுக்குச் செல்லாத மீனவர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மண்டைக்காடு, கொட்டில்பாடு, குறும்பனை மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் 1500-க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் வள்ளங்கள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனையடுத்து வானிலை ஆய்வு மையம். குமரிக் கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று அறிவித்துள்ளது. 


இதனால் கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என எச்சரித்த நிலையில் குளச்சல், சுற்றுவட்டார கடல் பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் குளச்சல், மண்டைக்காடு, கொட்டில்பாடு, குறும்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் வள்ளம் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.


எனவே இந்த படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை தொடரும் என்பதால் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகளும் கரை திரும்பி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com