குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்
இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளத்தை அமைப்பது தொடர்பாக 2013-ம் ஆண்டில் கருணாநிதி கடிதம் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு ஏவுதளம் அமைப்பது குறித்து இஸ்ரோவின் திரவ எரிபொருள் மையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
மங்கள்யான் குலசேகரபட்டினத்திலிருந்து ஏவப்பட்டிருந்தால் 1350 கிலோவிற்கு பதில் 1800 கிலோவரை எடையை எடுத்துச் சென்றிருக்கமுடியும் என இஸ்ரோ திரவ எரிபொருள் மையத்தின் முன்னாள் தலைமை பொதுமேலாளர் கூறியிருப்பதையும் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். பூமத்திய ரேகைக்கு நெருக்கம், திரவ எரிபொருள் மையத்தின் அருகாமை, சாதகமான தட்பவெட்ப சூழல் ஆகியவை குலசேகரப்பட்டினத்தை புதிய ஏவுதளம் அமைக்க உகந்தவையாக்குவதாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.