எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்.? நியாயமான தொகுதி மறுவரையறை - எம்.பி. கனிமொழி
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்த மசோதாவின் மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கும் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதில், திமுக முக்கியப் பங்கு வகித்திருந்தது.
இந்தசூழலில் தான், தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதே மசோதாவை கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாகியிருக்கிறது.
இந்தநிலையில், இன்று தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்தன.
இந்தச்சூழலில் தான், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ள எம்.பி. கனிமொழி அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக ஏன் கலந்துகொள்ளவில்லை? என்பது குறித்தும் தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைபாடு என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சி எம் பிக்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். பெரும்பான்மையான (37) எம் பிக்கள் இல்லாமல் கூட்டம் நடந்துள்ளது. இதேபோல், தொகுதி மறுவரையறை கூட்டத்தை தளபதி முதலமைச்சராக இருந்தபோது 05.03.2025ல் நடத்தினார். அதில் தவெகவின் ஆனந்த் கலந்துகொண்டார்.
நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பது தான் தீர்மானமாக இருந்தது. பாஜக நீங்களாக மற்ற கட்சிகள் எல்லாம் ஆதரித்த தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை உச்சத்தில் இருந்த போது கூட தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம், தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என தேர்தல் பணிகளை விட்டு, இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்தது திமுக.
தொகுதி மறுவரையறை மசோதாவை அடுத்த முறை கொண்டு வருவதாக தகவல் வருகிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு கொண்டு வந்ததாக தெரியவில்லை. இந்த மசோதாவை மாற்றி அமைத்து கொண்டு வருகிறோம் என எந்த தகவலும் இல்லை. இந்த கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் எங்களுக்கு தெரிவித்திருக்கக்கூடிய செய்தி.
அப்படி இருக்கையில் எதற்காக இந்தக் கூட்டம்? இந்த கூட்டத்திற்கு பின்னால் யார் உள்ளனர்? தலைமை செயலாளர் ஒவ்வொரு எம்பிக்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருப்பது என்பதே முறையில்லாதது. அவர் தலைமை செயலாளரா? அல்லது தவெக வின் தலைமை நிலைய செயலாளரா? என கேள்வி எழுகிறது. மேகதாது பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்ப இந்த எம்பிக்கள் கூட்டத்தை நடத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
