திமுக மக்களுக்கு செய்தவைகள் பற்றிய பட்டியலை தரட்டுமா?: முதல்வருக்கு கனிமொழி கேள்வி

திமுக மக்களுக்கு செய்தவைகள் பற்றிய பட்டியலை தரட்டுமா?: முதல்வருக்கு கனிமொழி கேள்வி
திமுக மக்களுக்கு செய்தவைகள் பற்றிய பட்டியலை தரட்டுமா?: முதல்வருக்கு கனிமொழி கேள்வி

"பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்குதான் அதிமுக அக்கறை காட்டுகிறது. தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க அக்கறை காட்டவில்லை. திமுக மக்களுக்கு செய்தவைகள் பற்றிய பட்டியல் வேண்டும் என்றால் முதல்வருக்கு ஒரு காப்பி அனுப்ப தயாராக இருக்கிறோம்” என செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார், கழுகுமலையில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக மகளிரணி மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் பெரும்பலானவர்கள் அதிமுவை சேர்ந்தவர்கள் என்றும், சில தினங்களுக்கு முன்பு கூட அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.


மேலும், “கைது செய்யப்பட்ட நபர், அதிமுக அமைச்சர்களுடன் பணியாற்றிய புகைப்படங்கள் கூட வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்குத்தான் அதிமுக அக்கறை காட்டுகிறதே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க அக்கறை காட்டவில்லை என்பதுதான் உண்மை. திமுக தொடர் போராட்டத்தின் காரணமாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்டுகள் கழித்து தற்பொழுது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை” என்றார்.

100 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக கேட்டதற்கு, மக்களுக்கு பாதுகாப்பு என்பது முக்கியம் என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “ 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக மக்களுக்கு என்ன செய்ததது என்று முதலில் சொல்ல வேண்டும். அதன் பின்னர் திமுக ஆட்சியில் செய்தது பற்றி நாங்கள் கூறுகிறோம். திமுக மக்களுக்கு செய்தது பற்றி கடந்த தேர்தல் அறிக்கையில் உள்ளது. முதல்வருக்கு வேண்டும் என்றால் அவருக்கு ஒரு காப்பி அனுப்பவும் தயாராக உள்ளோம்.


திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது முதல்வர் கூறும் எந்த ஊழல் வழக்குகளும் நிரூபிக்கப்படவில்லை. திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டவை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்காப்பீட்டு திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும். இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும், கிராம மக்கள் சபையில் பெற்ற மனுக்களுக்கு தீர்வு காணப்படும். அதிமுக 10 வருடமாக செய்ய தவறியதை நாங்கள் செய்வோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com