காஞ்சிபுரத்தில் ஆறு மாதம் சம்பளம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை டிபிசி பணியாளர்கள் முற்றுகையிட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. இதனால் அப்போது தற்காலிகமாக சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, வீடு வீடாக தொற்று அறிகுறிகள் தென்படுகிறதா, சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா, தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி காஞ்சிபுரம் நகராட்சியில் 250 பேருக்கு தற்காலிகமாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள 51 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தலா 5 முறைக்கு மேல் கணக்கெடுப்பு நடத்தினர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் பணிபுரிந்த அவர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை
"காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் கொரோனா கள பணியில் 250 பேர் பணிபுரிந்தோம். எங்களுக்கான ஆறு மாத ஊதியம் தராமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 நாட்களில் சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 20 நாட்களை கடந்தும் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.