கொரோனாவால் தந்தையையிழந்த பிள்ளைகளை தொடரும் வறுமை: விதிகளில் தளர்வு கொடுக்குமா தமிழக அரசு?

கொரோனாவால் தந்தையையிழந்த பிள்ளைகளை தொடரும் வறுமை: விதிகளில் தளர்வு கொடுக்குமா தமிழக அரசு?
கொரோனாவால் தந்தையையிழந்த பிள்ளைகளை தொடரும் வறுமை: விதிகளில் தளர்வு கொடுக்குமா தமிழக அரசு?

கொரோனாவால் உயிரிழந்த தந்தையொருவர், வங்கியில் கடன் வாங்கியிருந்த காரணத்தினால் அவரின் பிள்ளைகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், வறுமையின் கோரப்பிடியில் அத்தந்தையின் நான்கு பிள்ளைகள் சிக்கியுள்ளனர்.

கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் பெயரில், ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு செலுத்தப்படும் என்றும், அந்த குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது சேமிப்பிலுள்ள பணம் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் 'பெற்றோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகையாக உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் - அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசு ஏற்கும். பட்டப்படிப்பு வரையிலான செலவை அரசு ஏற்கும்' என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இந்த உதவித்தொகை அறிவிப்பு, தற்போது நடைமுறையில் கானல் நீராகி வருகிறது. அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காரணமாக, பெரும்பாலான குழந்தைகள் நிவாரணம் பெற முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு, வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. அக்காரணத்தால் அவர்களுக்கு நிவாரணத்தொகை கிடைப்பதில் சிக்கல் இல்லை என ஆறுதல் கொள்ளலாம். ஆனால், தந்தை அல்லது தாய் என பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகள், முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை பெற வேண்டும் என்றால், அந்தக் குழந்தைகளின் குடும்பம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். பட்டியலில் இல்லை என்றால் அவர்கள் பட்டியலில் இடம் பெற தகுதியானவர்களா என ஆய்வு செய்து, அவர்களை பட்டியலில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

மேற்கண்ட இந்த நிபந்தனையால், காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியைச் சார்ந்த சுந்தர்ராஜன் மற்றும் தனம் தம்பதியினரின் நான்கு பிள்ளைகள் அவதியுற்று வருகின்றனர். நான்கில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வாய் பேச இயலாது. சுந்தரராஜன், கைவினை பொம்மை செய்து விற்பனை செய்து வந்துள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாக இவர்களின் தொழில் முடங்கிப் போனதோடு, வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளார் சுந்தரராஜன்.

குடும்பம் அதிலிருந்து மீள்வதற்காக வங்கியில் கடன் பெற்று இருக்கிறார்கள். அப்படியான சூழலில்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக சுந்தரராஜன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பேரதிர்ச்சிக்குள்ளான சுந்தரராஜனின் குடும்பத்தினர் தற்போதுவரை அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டு காலமாக செய்த பொம்மைகள் அனைத்தும் விற்பனையாகாமல் இருப்பதால், அவற்றை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

மேலும் தற்காலிகமாக குடும்பத்தை சீர்செய்ய, இப்போதைக்கு உற்றார் உறவினர்களிடம் கடன் வாங்கி பொருளாதார நிலையை சீர் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை மற்றும் பிள்ளைகளுக்கு உண்டான கல்வி எதிர்காலம் அனைத்தும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளார், சுந்தரராஜனின் மனைவி. ஆனால் சுந்தர்ராஜன் குடும்பம், வறுமைக்கோட்டின் கீழ் வரும் பட்டியலில் இல்லை எனக் கூறி இவர்களுக்கு அரசு நிவாரணம் எதுவும் வழங்க வாய்ப்பில்லை என கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும், 'சுந்தர்ராஜன் வங்கியில் கடன் பெற்று இருக்கும் காரணத்தினால் அவர் வறுமைக்கோட்டின் கீழ் வர மாட்டார்' என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இரண்டு மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, சுந்தரராஜனின் மனைவி தனது நான்கு பிள்ளைகளையும் எவ்வாறு கரை சேர்ப்பார் என்று தெரியாமல் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்து இருக்கிறார். அக்குடும்பத்தின் பாரம் அனைத்தையும், சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த தனது இரண்டாம் மகனிடம் ஒப்படைத்து விட்டார் தாய். கல்லூரி செல்லும் வயதிலிருக்கும் அம்மகன், குடும்ப பாரத்தைச் சரிசெய்ய, சிறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறார்.

இந்த ஒரு குடும்பம் மட்டுமல்ல. இந்த விதிமுறைகள் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் பெற்றோரை இழந்த பெரும்பாலான குழந்தைகளால், நிவாரணம்கூட பெற முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில்கொண்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் உதவ, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கொரோனாவால் குடும்பத்தினரை இழந்தவர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

பிரசன்னா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com