காமராஜரின் துணிச்சலான “கே-பிளான்” மீட்சி பெற பாடம் கற்குமா இன்றைய காங்கிரஸ்.!

காமராஜரின் துணிச்சலான “கே-பிளான்” மீட்சி பெற பாடம் கற்குமா இன்றைய காங்கிரஸ்.!
காமராஜரின் துணிச்சலான “கே-பிளான்” மீட்சி பெற பாடம் கற்குமா இன்றைய காங்கிரஸ்.!

வேறு எவராலும் அந்த காரியத்தை நிச்சயமாக செய்யமுடியாது, ஆனால் காமராஜர் செய்தார். தான் கொண்டுவந்த ’கே-பிளான்’ திட்டத்தை  சாத்தியமாக்க ஒன்பது ஆண்டுகளாக வகித்துக்கொண்டிருந்த தமிழக முதல்வர் பதவியை பக்தவச்சலத்திடம் விட்டுக்கொடுத்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், தங்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று காமராஜர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு (2. அக்டோபர் 1963) அப்பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார் காமராஜர்.

லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் கே-பிளானை மனதார ஏற்றுக்கொண்டு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள். மேலும் அவரது கே – பிளானை ஏற்றுக்கொண்டு நாடு முழுவதும் பல முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை விட்டுவிலகி கட்சிப்பணியாற்ற களம் இறங்கினர். பெரும் புரட்சியாக பார்க்கப்பட்ட அந்த பிளான் காரணமாக இந்தியாவின் பல இலட்சம் இளைஞர்கள் விருப்பத்துடன் காங்கிரஸில் இணைந்தனர். உண்மையில் 1960 களுக்கு பிறகு அகில இந்திய அளவில் காங்கிரஸிற்கு பல நெருக்கடிகள் உருவாகியபோதும் கட்சி உயிர்ப்போடு இருந்ததற்கு காரணம் கே-பிளான் தான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.

ஆனால், இந்திரா காந்தி காலத்திற்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பல்வேறு மாநிலங்களில் சரிய தொடங்கியது. காங்கிரஸின் மாபெரும் தலைவராக இருந்த காமராசரே அக்கட்சியை விட்டு விலகும் சூழல் உருவாகியது. அதுபோலவே தொடர்ச்சியாக இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், சோனியா காந்தி ஆகியோர் காங்கிரஸின் தலைவராக இருந்த காலகட்டங்களில் மம்தா பானர்ஜி, சரத் பவார், மூப்பனார், ஜெகன்மோகன் ரெட்டி, ரெங்கசாமி, வாசன் போன்ற பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக தனிக்கட்சி கண்டபடி உள்ளனர். இப்போதும்கூட ஆட்சியில் இருந்த கர்நாடகா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களை காங்கிரஸ் இழந்துவிட்டது. ராஜஸ்தான் ஆட்சி ஊசலாட்டத்தில் இருக்கிறது. கோவா, மணிப்பூர் போல பெரும்பான்மை இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியாமல் பல மாநிலங்களில் வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஆலமரம் போல வேர்பரப்பி, விழுது படர்ந்த இயக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்சி பல மட்டங்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்துவருவது உண்மை. கட்சித்தாவல்கள் என்பது காலங்காலமாக எல்லா கட்சிகளிலும் நடக்கிறது என்றாலும், அது காங்கிரஸில் ஏன் அதிகமாக நடக்கிறது என்பதுதான் கேள்வி. ஏன் காங்கிரஸ் கட்சி மாநில தலைமைகளை வளர்த்தெடுக்க தவறுகிறது. ஏன் காங்கிரஸ் கட்சி எப்போதும் கோஷ்டிகளை வளர்ப்பதில் முன்னிலையில் இருக்கிறது என்பதுபோன்ற பல சுயபரிசோதனைகளை காங்கிரஸ் செய்துகொள்ளவேண்டும் என்பதே மூத்த காங்கிரஸ்கார்ர்களின் விருப்பம்.

ஒரு கட்சியானது,ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் தனது கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்களையும், புதுமைகளையும் புகுத்தியபடியே இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த கட்சியால் எப்போதும் புத்துயிர்ப்புடன் செயல்படமுடியும். இதனையெல்லாம் தனது காலத்திலேயே சிந்தித்துதான் காமராஜர் கே-பிளானை கொண்டுவந்தார். காங்கிரஸ் கட்சி பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் இவ்வேளையில் காமராஜர் கொண்டுவந்த கே-பிளான் போல அதிரடி வியூகம் மட்டுமே காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com