"ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு.. மே மாதம் மல்லுக்கட்டு" - மதுரை பிரசாரத்தில் கமல்ஹாசன்!

"ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு.. மே மாதம் மல்லுக்கட்டு" - மதுரை பிரசாரத்தில் கமல்ஹாசன்!
"ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு.. மே மாதம்  மல்லுக்கட்டு" - மதுரை பிரசாரத்தில் கமல்ஹாசன்!

மதுரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மதுரையில் பிரசாரத்தைத் தொடங்கினார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மாணவர்களுடன் அவர் பேசும் போது “ காந்திக்கு உடை வடிவமைப்பு செய்தது மதுரை விவசாயி. தற்போது மதுரை தூசியும் குப்பையும், மழைநீர் தேக்கமும், கழிவுநீர் ஓடும் மதுரையாக உள்ளது. மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என எம்.ஜி.ஆர் கனவு கண்டார். மதுரையை நாம் இணைந்து மாற்றிக்காட்ட வேண்டும். எம்.ஜி.ஆர் கனவை நிகழ்த்தாமல் உறங்கி கொண்டுள்ள ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் இது. என் இளைஞர்களை வேலைவாய்ப்பு என்ற பெயரில் கூலிக்காரர்களாக மாற்ற விரும்பவில்லை. அவர்களை சம்பளம் வழங்கும் முதலாளிகளாக மாற்ற விரும்புகிறேன்.

மதுரையில் ஜனவரி மாதம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு. மே மாதம் கயவர்களுடன் மல்லுக்கட்டு. மதுரையை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதை உறுதிமொழியாக கொடுக்கிறேன். பெரியார் ஓட்டு அரசியல் செய்யவில்லை. அவரைப்போல வாழ்க்கையை கழித்துவிடலாம் என எண்ணிணேன். என்னை அவ்வாறு வாழ விட்டார்களா.. அதனால் தான் வந்தேன். நான் அரசியலுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து பல மாதம் ஆகிவிட்டது.

மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்ற வேண்டியது என் பொறுப்பு. வேலைவாய்ப்பு, கல்வி, உணவு என்பது உங்கள் உரிமை. அதை தர வேண்டியது அரசின் கடமை. மதுரை புரட்சிக்கு புதிய ஊர் அல்ல. மீண்டும் ஒரு புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும்.
நமது கட்சியில் மாவட்ட ஆட்சியர், வழக்கறிஞர், மருத்துவர் என நல்லவர்களின் அரசியல் உள்ளது. ஆனால் அதை ரவுடிகளின் களமாக மாற்றிவிட்டனர்.

எங்கள் அரசியல் மக்கள் அரசியல். மாணவர் அரசியல். மகளிர் அரசியல். தேடித்தீர்ப்போம் வா என்பதை போல திறமான அரசை உருவாக்க வேண்டும். அரசே மக்கள் குறைகளை தேடிவந்து தீர்க்க வேண்டும். வரும் முன் காக்க வேண்டும் அரசு. வந்த பின்பு காப்பது அல்ல அரசு. கட்சியில் சேர உள்ள இளைஞர்கள் சேர்ந்து விடுங்கள். நம் கட்சியில் நேர்மை மட்டுமே வாக்குறுதி.
நேர்மையை நாங்கள் காப்பது போல. இணைய உள்ள நீங்களும் காக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் திருடுவதை நிறுத்தினாலே மூன்று தமிழ்நாட்டை சுபிட்சமாக வைத்துக்கொள்ளலாம். அரசியலில் எங்கள் உத்தி நேர்மை தான். நேர்மையை கொண்டு தேர்தலில் வெல்வேன். எங்கள் நேர்மைக்கு எதிரணியிடம் பதிலடி இல்லை. பேச வேண்டிய நேரம் இல்லை. செயல்படுத்த வேண்டிய நேரம். என் கரங்களை வலுப்படுத்துங்கள். நீங்கள் ஆணையிட்டால் நடத்திக்காட்டுவேன். ஆணை நீங்கள் இட வேண்டும். நான் விட கூடாது.

ஊழலை எவ்வாறு ஒழிப்பீர்கள் என கேள்வி எழுப்பிய போது, “ ஊழலை ஒழிப்பது என்பது தனி மனிதன் செய்வது அல்ல. நீங்களும் கைகோர்க்க வேண்டும். எனக்குள்ள கோபம் உங்களுக்கும் வேண்டும். அரசு கொள்ளையடித்த கஜானா மக்கள் நிரப்பியதாகவே உள்ளது. நேர்மையை முதலீடாக வைக்க வேண்டும். மக்களும் நேர்மையை முதலீடு செய்ய வேண்டும்.உங்கள் ஏழ்மையை பார்த்து நான் செத்தால் அது நல்ல சாவு அல்ல. உங்களுக்கான வாழ்வு என் வாழ்வு.

விவசாயமும், மதுவும் ஒன்றாய் தோன்றியதே. எல்லோரும் குடியுங்கள் என மாவட்ட அதிகாரியை வைத்துக்கொண்டு அரசு சொல்வது நியாயமாகாது. அத்தியாவசிய பொருட்களை போல மது விற்கக் கூடாது. அரசு மது விற்கக் கூடாது. நாங்கள் வந்தால் கல்வியும் ஆரோக்கியமும் மேலோங்கும்.

மக்கள் நீதி மையம் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “ வேலை வாய்ப்பு என்பது ஆழமான வேர். லட்சோப லட்சப் பொறியாளர்களை படிக்க வைத்துவிட்டு வேலைவாய்ப்பு எப்படி சாத்தியமாகும். என் பிள்ளைகள் கூலிக்கு மாரடிக்கும் என்பதை மாற்றி முதலாளிகளாக தொழில் முதலீட்டாளர்களாக மாற்ற வேண்டும். விவசாயிகள் பட்டத்திற்கு பெண்களும் பொருந்துவார்கள். ஆண்களுக்கு நிகராக பெண் விவசாயிகளை உருவாக்க வேண்டும்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து எதற்கு என்ற கேள்விக்கு, “கல்வி என்பது மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அறிவுக்கழுதைகளாக மாணவர்களை மாற்றக்கூடாது. கல்வியை சுமையாக மாற்ற கூடாது. அவர்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் நீக்கலாம். கைதட்டலுக்காக இதை சொல்லவில்லை என நீட் குறித்த கேள்விக்கு பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com