பட்டினம்பாக்கத்தில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு: ‘விசில்’ நடவடிக்கை
மக்கள் நீதி மையத்திற்கான ‘விசில்’ செயலியில் வந்த புகாரின் அடிப்படையில் அதன் தலைவர் கமல்ஹாசன் புகாருக்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட்டதோடு மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக ‘விசில்’ என்ற செயலியை ஏற்கனவே தொடங்கி வைத்திருந்தார். அரசியலில் கால் பதித்துள்ள அவர், மக்களின் பிரச்னைகளை சரிசெய்ய இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனையடுத்து விசில் செயலியில் பொதுமக்கள் தங்களது புகாரினை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, “சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என ஒரு புகார் வந்துள்ளது.
அந்தப் புகாரின் அடிப்படையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பாதிப்பிற்குள்ளான இடங்களை நேரில் பார்வையிட்டார். அத்தோடு அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.