”வர்றனு சொல்லுவார்; அப்புறம் இல்லை என்பார்.. 30 வருசமா..’’ - ரஜினி குறித்து கடம்பூர் ராஜூ!

”வர்றனு சொல்லுவார்; அப்புறம் இல்லை என்பார்.. 30 வருசமா..’’ - ரஜினி குறித்து கடம்பூர் ராஜூ!
”வர்றனு சொல்லுவார்; அப்புறம் இல்லை என்பார்.. 30 வருசமா..’’ - ரஜினி குறித்து கடம்பூர் ராஜூ!

’’என்ன அரசியலை பற்றி பேசினார்கள் என்பதை ஆளுநர் அல்லது ரஜினிகாந்த் தான் சொல்ல வேண்டும். ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்’’ என முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் அருகேயுள்ள பாண்டிமுனீஸ்வரன் திருக்கோவில் ஆடி திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ கலந்துகொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விருப்பம். முதலில் அரசியலுக்கு வருவதாகக் கூறினார். பின்னர் கால சூழ்நிலையினால் வரவில்லை என்றார். என்ன அரசியலை பற்றி பேசினார்கள் என்பதை ஆளுநர் அல்லது ரஜினிகாந்த் தான் சொல்ல வேண்டும்.

ஆளுநரிடம் என்ன அரசியல் பேசினார் என்று தெரியவில்லை. ஆளுநர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பது எங்கள் கருத்து. அரசியல் தொடர்பான கருத்தினை நடிகர் ரஜினிகாந்த் புதிதாக சொல்லவில்லை, 30 வருடமாக இன்றுக்கு வருகிறேன், நாளைக்கு வருகிறேன் என்றார். பின்னர் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துவார். பின்னர் விரவில்லை என்பார். இது 30 வருடங்களாக நமக்கு பழக்கப்பட்ட ஒன்று. அவர் அரசியலுக்கு வந்தால் தாக்கம் இருக்குமா என்று கருத்து கூறலாம்

ஓ.பி.எஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். இதன் பின்னர் அவர் யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. சசிகலா அல்லது திமுகவுடன் கூட ஓபிஎஸ் சேரலாம். அவருடைய நிலைப்பாடு பற்றி நாங்கள் கருத்து கூறமுடியாது.

கூட்டணி குறித்து ஆதராம் இல்லாத கருத்துக்கு பதில் கூற முடியாது. எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக கூட்டணியினர் சரியாக செயல்படவில்லை. பலர் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற விவாதத்தில் திமுகவினர் கலந்து கொள்ளவில்லை. 2ஜி, மதுவிலக்கு, மது உற்பத்தி ஆலை போன்ற விவகாரங்கள் வரும் போது திமுகவினர் வெளிநடப்பு செய்யும் நிலை உள்ளது.

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்கப்பட இருப்பது வரவேற்கக்கூடியது. 1991ல் அதிமுக ஆட்சியின்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அமைச்சர் அறிவித்து இருப்பது வரவேற்க கூடியது. சொல்வது எளிது செயலில் திமுக அரசு காட்டவேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com