``சிலரைத் திருப்தி செய்ய ஆன்மிகத்தை தம்பட்டம் அடிக்க வேண்டுமா அரசு?”- கி.வீரமணி அறிக்கை

``சிலரைத் திருப்தி செய்ய ஆன்மிகத்தை தம்பட்டம் அடிக்க வேண்டுமா அரசு?”- கி.வீரமணி அறிக்கை
``சிலரைத் திருப்தி செய்ய ஆன்மிகத்தை தம்பட்டம் அடிக்க வேண்டுமா அரசு?”- கி.வீரமணி அறிக்கை

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி.

`மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார் திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பல்லக்கை தூக்குபவர்களே விரும்பி தூக்கி சுமக்க முன்வருவதாக கூறப்படும் விளக்கம் அறிவுப்பூர்வமாகவோ, சட்டப்பூர்வமாகவோ ஏற்கதக்கதல்ல. கை ரிக்‌ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் எனக் கூறி இன்று இழுத்தால் அதை சட்டம் அனுமதிக்குமா? மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது, தவிர்க்க இயலாததுதான். அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்துவிடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மன்னார்குடி ஜீயர் - அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், இது 1971-ஆம் ஆண்டு ஆத்திக - நாத்திகப் பிரச்சாரத்தின் ‘புதிய அவதாரம்‘தானே!’ இதன் பின்னணி, பின்பலம் எங்கே, எந்த நோக்கத்துடன் என்பது மிகவும் ஆராயத்தக்கதும், புரிந்துகொள்ளவேண்டியதும் ஆகும். இது முழுக்க மனிதநேய பிரச்னையின்பாற்பட்டதாகும். தி.மு.க. ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம்.

இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மரியாதைக்குரிய நமது முதலமைச்சருக்கு நாம் கனிவுடன், உரிமையுடன் கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அன்று சுட்டிக்காட்டியதுபோல், பெரும்பான்மை மக்கள் நலனுக்கும் - சமூகநீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மிக போர்வை போர்த்திய ‘நரியர்கள்!’ எனவே, இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள்கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சர் அவர்களும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள்.

ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்ற அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அரசின் இந்த முடிவை, தங்களுக்கான வெற்றி என்று துள்ளிக் குதிப்பார்கள்; மதவெறி காவி சக்திகளும் மகிழ்வார்கள். பிற்போக்காளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பின்வாங்குதல் - இந்த பல்லக்குப் பிரச்சினையில் ஒரு தோல்வி என்று ஊடகங்கள் சித்தரிக்கக் கூடும். எப்போதுமே சமூகநீதிக்கான, மனித உரிமைப் போராட்டங்கள் உடனடியாக வெற்றியை தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் முன் வைக்கப்படுகிறது. அது, `தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன் வருகிறார்களாம்!’ - இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா? கை ரிக்ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா?

குறிப்பிட்ட மாதங்களைத் தாண்டிய கருவை அதனைச் சுமப்பவர்கள் விரும்பி, தானே கருவை அழித்துக் கொள்ள விரும்புகிறார்கள் எனில், அதை அனுமதிக்கலாமா? பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும்பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன் வந்தால், சட்டமும் - அரசும் அனுமதிக்குமா? மனித உரிமை மலிவான விலைச் சரக்கா? இந்த அரசு சிலரைத் ‘திருப்தி’ செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ‘ஆன்மிகம்‘, ‘ஆன்மிகம்‘ என்று ‘தம்பட்டம்‘ அடிக்கவேண்டுமா?

தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ‘’மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?’’ என்பதுதான் அது. எனவே, அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியே பாதுகாப்பான நிரந்தர வழி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com