“நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள்; எங்களுக்கு சக்தி இல்லை என கருதாதீர்கள்” - நீதிபதி கருத்து

“நிதி இல்லையென்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டிய தானே?” என தற்காலிக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் குறித்து நீதிபதி தேவானந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
tnstc
tnstcpt web

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 01.04.2014 முதல் 31.01.2017 வரை செலுத்த வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவைத் தொகையை தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியார்களுக்கு வழங்க வேண்டும், ஆனால் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விடக் குறைவான ஊதியத்தை வழங்கி வருகின்றனர்.

இதுசம்மந்தமாக கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 2017ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தாத காரணத்தால் 2018ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் 2019ம் ஆண்டு நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் குறைந்த பட்ச ஊதிய விகிதத்தின் படி ஊதிய நிலுவைத்தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் 4 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதிய நிலுவைத்தொகை வழங்கவில்லை” என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு போக்குவரத்து கழக முன்னாள் மேலாண் இயக்குனர் ஆறுமுகம், பொதுமேலாளர் இளங்கோவன், மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் ராஜேஸ்வரன், முருகேசன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

விசாரணையில் நீதிபதி தேவானந்த், “2016 ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தற்போதுவரை நிறைவேற்றவில்லை என தெரிய வந்துள்ளது. தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை. செய்த பணிக்கு உரிய ஊதியத்தை மட்டுமே கேட்கின்றனர். அரசு நிரந்தர ஊழியர்களும், தற்காலிக ஊழியர்களும் பேருந்துகளை இயக்கினால் மட்டும் தான் பேருந்துகள் இயங்கும்.

தற்காலிக பேருந்து ஓட்டுநர்களுக்கும், நிரந்தர பேருந்து ஓட்டுநர்களும் பேருந்துகளை இயக்குவதில் ஏதாவது வேறுபாடு உள்ளதா? இரு தரப்பு பணியாளர்களும் பொதுவாக மக்களுக்காக தான் பணியாற்றுகிறார்கள். ஆனால் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. எல்லா பணியாளர்களும் ஒரே மாதிரி தான் பேருந்துகளை இயக்குகின்றனர். பணியை முறையாக செய்த ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல.

பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க நிதி பற்றாக்குறையை காரணமாக கூறுவதா? நிதி இல்லையென்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டிய தானே? நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள். நீதிமன்றத்திற்கு சக்தி இல்லை என கருதாதீர்கள்.

நீதிக்காக நீதிமன்றங்கள் எப்போதும் தொடர்ந்து இயங்கும். விடுமுறை நாட்களிலும் கூட நீதிமன்றங்கள் முக்கியமான வழக்குக்காக நடைபெறுகிறது. அதை போல தான் போக்குவரத்து துறையில் பேருந்துகளை எல்லா நாட்களிலும் மக்களுக்காக ஊழியர்கள் இயக்குகிறார்கள்.

அவர்களுக்கு ஊதியத்தை தாமதிப்பது வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல என கருத்து தெரிவித்து, நீதிமன்ற உத்தரவை நினைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவும், அதனை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றும் விதத்தில் தான் உள்ளது” என குறிப்பிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com