வருமான வரித்துறைக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு
வருமான வரித்துறைக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்புweb

வருமான வரித்துறை அபராதம்.. விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம், நாளை காலை தீர்ப்பு வழங்குகிறது.
Published on
Summary

நடிகர் விஜய் 2015-16 நிதியாண்டில் வருமான வரி கணக்கில் 35.42 கோடி ரூபாய் வருமானம் தெரிவித்தார். ஆனால், புலி படத்திற்கான 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை கண்டறிந்து, 1.5 கோடி அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர, நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

புலி திரைப்படம்
புலி திரைப்படம்

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு..

தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் இறுதி விசாரணை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று நடந்தது. அப்போது, விஜய் தரப்பில் சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com