சினிமா பார்த்து வீட்டை விட்டு ஓடியதாக மாணவி வாக்கு மூலம் அளித்ததால், திரைப்பட தணிக்கை குழு தலைமை அதிகாரி வரும் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மயிலாடுதுறையைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, திடீரென மாயமானார். இதனையடுத்து அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி, மாணவியின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து மற்றும் அனிதா சுமந்த் அகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரனைக்கு வந்தது. அப்போது, மயிலாடுதுறையை சேர்ந்த பள்ளி மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதிகள் முன்பு வாக்குமூலம் அளித்த மாணவி, தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். சினிமா படங்களைப் பார்த்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து மோசமான திரைப்படங்களால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாக நீதிபதி நாகமுத்து வேதனை தெரிவித்தார். மாணவ, மாணவிகளின் தவறான வழிநடத்தைக்கு திரைப்படங்களும் காரணம் என்பதால், இதுதொடர்பாக திரைப்பட தணிக்கை குழுவின் தலைமை அதிகாரி வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.