”என் கணவரின் கழுத்தில் ரத்தகறைகள் இருந்தன” நெய்வேலி விசாரணை கைதி மரணத்தில் அதிர்ச்சி தகவல்

”என் கணவரின் கழுத்தில் ரத்தகறைகள் இருந்தன” நெய்வேலி விசாரணை கைதி மரணத்தில் அதிர்ச்சி தகவல்
”என் கணவரின் கழுத்தில் ரத்தகறைகள் இருந்தன” நெய்வேலி விசாரணை கைதி மரணத்தில் அதிர்ச்சி தகவல்

கைதி செல்வமுருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் இன்று விருத்தாசலம் சிறையில் நீதிபதி கே.ஆனந்த் வீடியோ பதிவுடன் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்குத்து சக்தி நகர் பகுதியில் வசிக்கும் காடாம்புலியூர் மணி என்பவரின் மகன் செல்வமுருகன்(39). இவர் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதியன்று துர்க்கை அம்மன் கோவில் அருகே காவியா(26) என்ற இளம் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை அறுத்து சென்றதாக நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கைது செய்யப்பட்டு ஒரு சவரன் தங்கச் செயின், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் விருத்தாச்சலம் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

விசாரணையில் அவர் அடிதடி மற்றும் திருட்டு என 4 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த 2ஆம் தேதி அன்று அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மீண்டும் கிளை சிறைக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 4ஆம் தேதி நள்ளிரவு மீண்டும் வலிப்பு நோய் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதுகுறித்து 5.11.2020 அன்று மாலை விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 இன் நீதிபதி K.ஆனந்த், செல்வமுருகனின் மனைவி பிரேமாவிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து பிரேமா, ‘’பிணவறையில் உறவினர் முன்பு உடலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து எனது கணவரின் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய கழுத்து, முதுகில் ரத்தக் கட்டுகள் இருந்தது. விசாரணையின்போது நெய்வேலி காவல்துறையினர் அடித்ததால்தான் இந்த காயம் ஏற்பட்டிருக்கக்கூடும் என விசாரணையில் தெரிவித்தனர். 

மேலும் 28.10.2020 அன்று எனது கணவர் செல்வமுருகன் தொழில் சம்பந்தமாக சென்று வீடு திரும்பவில்லை எனவும் இது சம்பந்தமாக கணவர் காணவில்லை எனவும் புகார் அளித்திருந்தேன். ஆனாலும் என் கணவனை கைது செய்த விஷயத்தை என்னிடம் தெரிவிக்கவில்லை. திருட்டு வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொள்ளக்கூறி சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். இதுகுறித்து விசாரணையின்போது நீதிமன்ற நடுவரிடம் எனது தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றுக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ’’எனது கணவர் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். நெய்வேலி நகர காவல் நிலைய காவலர்கள் சுதாகர், அறிவழகன், மற்றுமொருவர், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் எனது கணவரை தாக்கியுள்ளனர். மேலும் நெய்வேலி இந்திரா நகரில் உள்ள லாட்ஜில் அடைத்துவைத்து சட்டவிரோதமாக விசாரணையும் செய்துள்ளனர்’’ என்று அவர் கூறியுள்ளார்.

நீதிபதி விசாரணைக்கு பிறகு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5.11.2020 இரவு உடல் அனுப்பப்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் செல்வமுருகன் இறப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று விருத்தாசலம் கிளை சிறையில் சிறை அதிகாரி, சிறைக்காவலர்கள், காவலர்கள் மற்றும் சிறையில் இறந்த செல்வமுருகன் உடனிருந்த சக கைதிகளிடம் விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 இன் நீதிபதி கே.ஆனந்த் காலை 11 மணியிலிருந்து 2.45 மணி மணி வரையும் வீடியோ பதிவுடன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com