1992 வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு: சம்பவ இடத்தில் நீதிபதி விரைவில் நேரில் ஆய்வு

1992 வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு: சம்பவ இடத்தில் நீதிபதி விரைவில் நேரில் ஆய்வு
1992 வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு: சம்பவ இடத்தில் நீதிபதி விரைவில் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராம மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு நடத்த உள்ளார்.

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வனத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், ஐ.எப்.எஸ். அதிகாரிகள் 4 பேர் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய்த் துறையினர் என, 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

மேலும், மார்ச் 4 ஆம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக் கிராமத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com