சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து பங்கெடுப்பாளர் ஒருவரை வெளியேற்றியதற்கு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் உதவித் தலைவர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் உதவித் தலைவர் நாகராஜன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், “நடைபெற்றுக் கொண்டிருக்கும் 43-ஆவது புத்தகக் கண்காட்சியிலிருந்து ஒரு பங்கெடுப்பாளரை, அவர் அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளார் என்பதைக் காரணமாய்க் கூறி அவருக்கு கடிதம் அளிக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை
ஏற்புடையதல்ல.
புத்தகங்களைத் தடைசெய்வது என்பதே இந்த ஜனநாயக யுகத்தில் ஏற்புடையதல்ல என்றாலும் பப்பாசியின் விதிமுறைகளின்படி அரசாங்கத்தால் சட்டப்படி தடை செய்யப்பட்ட புத்தகங்களை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யக் கூடாது என்பதே பங்கு பெறும் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள ஷரத்து ஆகும். எனவே அரசுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல. அத்தோடு இது போன்ற அடிப்படையான கொள்கை
மற்றும் உரிமைப் பிரச்னையில் முழுமையான நிர்வாகக் குழுவைக் கூட்டியே முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து புத்தகங்கள் விற்பனையில் ஈடுபட்ட பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கடைக்கு தடை விதிக்கப்பட்டது.