ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்
ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்web

பாஜக மாவட்டத் தலைவர் ஆபாச பேச்சு | ”அழுகிப்போன மனநிலை..” காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம்!

பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திரு. செந்தில் நாதன் தன்னைப் பற்றி ஆபாசமானகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி பேசியதாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Published on

பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திரு. செந்தில் நாதன் பொதுவெளியில் நடந்த நிகழ்ச்சி மேடை ஒன்றில், தன்னைக்குறித்து ஆபாசமாக பேசியிருப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் செந்தில் நாதன் பேசியதாக வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் அறுவெறுக்கத்தக்க வகையில் கடுமையாக பேசப்பட்டுள்ளது.

ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்
”வம்புக்கு இழுக்கக்கூடாது.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”.. திமுக MLA-க்கு எம்பி ஜோதிமணி பதிலடி!

பாஜக மாவட்டத் தலைவர் ஆபாசமாக பேசியிருக்கும் வீடியோவை இணைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எம்பி ஜோதிமணி, “பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திரு. செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். அப்பொழுதுதான் சமூகம் இப்படிப்பட்ட அழுகிப்போன மனநிலை உள்ள ஆண்களுக்கு எதிராக காட்டமான எதிர்வினையாற்ற முடியும்.

இவரைப் பொறுத்தவரையில் வீட்டுப் படிதாண்டி பொதுவெளியில் பொதுவாழ்வில் பங்கேற்கிற பெண்கள் எல்லோருமே வேசிகள் தான். அவர்களுக்கு சொந்த திறமை, உழைப்பு, அனுபவம், கண்ணியம் எதுவுமே இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.

கரூர் எம்.பி ஜோதிமணி
கரூர் எம்.பி ஜோதிமணிPt web

ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். எங்கள் குடும்பத்தில் யாரும் பொதுவாழ்வில் இருந்ததில்லை. அரசியல் என்றாலே அச்சப்படுகின்ற எத்தனையோ குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.

நான் எனது 21 வயதில் துணிச்சலோடு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தேன். ஒரு ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அநீதிக்கு எதிராக, மக்களுக்காகப் போராடும் போராட்டக்குணத்தால், சமரசமற்ற நேர்மையால், ஒரு பெண் என்பதால், அரசியல் பின்னணியோ, பெரிய அளவிலான பொருளாதார பலமோ இல்லாத காரணத்தால், வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலையால் எத்தனையோ இடர்ப்பாடுகளை, தடைகளை, கடினமான காலகட்டங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இன்னும் எதிர்கொள்கிறேன்.

ஆனால் எதற்காகவும் தேங்கிவிடாமல் எனக்கு முன்பு இந்த கடினமான பாதையில் பயணித்து, சாதித்த எத்தனையோ கோடி பெண்களைப் போல, நானும் தடைகளை உடைத்துக் கொண்டு எனது பயணத்தை தொடர்கிறேன்.

பத்தாண்டு காலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அடுத்த பத்தாண்டு காலம் இளைஞர் காங்கிரசின் தேசிய பொது செயலாளர் உட்பட பல்வேறு மாநிலங்களில் கட்சிப்பணி, ஐந்து ஆண்டு காலம் அரசியல் வனவாசம், சமூகப் பணி. 20 ஆண்டு கால கடுமையான, நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல், சமூகப்பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் கட்சியிலேயே கூட பணம் இல்லை என்பதால் எனக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் எனது தலைவர் சாதாரண கட்சி தொண்டர்களின் உழைப்பை மதிக்கக்கூடியவர். பத்தாண்டு காலம் எனது கடும் உழைப்பை, சமரசமற்ற துணிச்சலான அரசியல் நிலைப்பாடுகளை நேரில் பார்த்தவர், எனது மக்கள் பணியை, கொள்கை நிலைப்பாட்டை, சமூக அக்கறையைப் புரிந்துகொண்டவர்.

அதனால் கரூரில் போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கினார். எமது மக்கள், தேர்தல் களத்தில், பொதுவாழ்வில் உடன் பயணிக்கும் தோழர்கள் என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தனர். அதனால் எழாண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்.

ஒரு நாளில் குறைந்தது 15 மணி நேரம் பணி புரிய வேண்டும். வருடத்தில் 365 நாட்களில் 50 நாட்கள் கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும், பிரச்சினைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல். ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்
”அவமரியாதையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” - நயினாருக்கு த்ரிஷா கண்டனம்!

பெண் என்றாலே பாலியல் பொருள்..

பெண் என்பதால் இந்த தகுதி, திறமை, உழைப்பு, அறிவு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை பெண் என்றாலே வெறும் உடல், பாலியல் பொருள் அவ்வளவே.

எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரே மாதிரியான, தனிமனித, ஆபாசத் தாக்குதல்களின் தொடர்ச்சியே இது.

பெண்கள் பொது இடத்திற்கு வந்தால், நம் குரலை உயர்த்தினால், அதிகாரத்தை கேள்வி கேட்டால், மௌனமாக இருக்க மறுத்தால் அதற்கான எதிர்வினை இப்படித்தான் இருக்கிறது. பெண்களுக்கு பொது வாழ்க்கையில் காலடி வைப்பது எப்போதும் எளிதானது அல்ல. நாம் செய்த செயல்களுக்காக அல்லாமல், நாம் ஒரு பெண் என்பதற்காகவே ஆபாசத் தாக்குதல் அவமதிப்பு, கண்ணியச் சிதைப்பு, பாலியல் அவமானம், மிரட்டல்கள் என அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வாதங்கள் தோல்வியடையும் தருணத்தில், நம் கண்ணியம் தாக்கப்படுகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, நம் ஒழுக்கம் திட்டமிட்டு அவமதிக்கப்படுகிறது. பாலியல் இழிவுபடுத்தும் மொழியும், மிரட்டல்களும், பொது மேடைகளில் செய்யப்படும் அவமானங்களும் தவறுதலாக நிகழ்பவை அல்ல. இவை ஆண்டாண்டுகாலமாக பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்.

பெண்களை மௌனமாக்க, பொது வெளிகளில் இருந்து, அரசியலிலிருந்து, தலைமைத்துவத்திலிருந்து வெளியேற்றவே இந்த ஆபாசத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இப்படித்தான் பொது வெளிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறுகின்றன. இப்படித்தான் பெண்கள் பின்னடைய வைக்கப்படுகிறார்கள் ” என பதிவிட்டுள்ளார்.

ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகிக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்
நடிகை குறித்த சர்ச்சை பேச்சு| ”தவறி வந்த ஒரு வார்த்தை..” வருத்தம் தெரிவித்த நயினார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com