கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த தினேஷ் குமார் தற்கொலை செய்துள்ளதையடுத்து கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
கோடநாடு அருகே உள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். முதலில், ரத்த அழுத்தம் காரணமாக, மயக்கமடைந்தார் எனக் கூறி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவர் தூக்கில் தொங்கியதற்கான அடையாளம் கழுத்தில் இருந்தது பற்றி டாக்டர்கள் கேட்டார்களாம். பின்னர், கண்ணில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் நேற்று தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலையுடன் சேர்த்து கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் மர்மமான முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் முதலில் காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி பலியானார். மற்றொரு குற்றவாளியான சயானின் மனைவி, மகள் விபத்தில் பலியாயினர். அடுத்தடுத்து நடந்த இந்த உயிர்பலிக்குப் பிறகு இப்போது தினேஷ்குமாரும் உயிரிழந்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.