ஜெயலலிதா கைரேகை விவகாரம்: அரசு மருத்துவர் நேரில் ஆஜராகி சாட்சியமளிப்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
கடந்தாண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றபெற்றதை எதிர்த்து, தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு கட்சியின் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதுதானா என தெளிவுபடுத்துமாறு சரவணன் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் வில்ஃப்ரெட் ஆகியோர் ஏற்கெனவே நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். அதைத்தொடர்ந்து, வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றளித்த மருத்துவர் பாலாஜி , நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் சாட்சியமளித்தார்.