ஜெயலலிதா பணிப் பெண்கள் 3 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்
நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் 3 பேர் ஆஜராகியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 145 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவரைத்தொடர்ந்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டின் பணிப்பெண்கள் 3 பேர் ஆஜராகியுள்ளனர். இதற்காக தஞ்சாவூரில் இருந்து போலீசாரின் பாதுகாப்போடு தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோர் அழைத்து வரப்பட்டனர். ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நிறைவுற்றதும் இவர்களிடம் விசாரிக்கப்படும் என தெரிகிறது.