ஜெயலலிதா மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்று மாதத்தில் அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். மருத்துவமனையில் அவர் இருந்தபோது எந்த புகைப்படமும் வெளிவராததால் அவரது மரணம் குறித்து சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
இந்நிலையில் அந்த விசாரணை ஆணையத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. விசாரணை ஆணையம் தனது விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.