“7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் சம்மதம்” - ஜெயக்குமார்

“7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் சம்மதம்” - ஜெயக்குமார்
“7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் சம்மதம்” - ஜெயக்குமார்

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு இதுவரை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனிடையே ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தது. 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்தால் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளித்தால்தான் ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும் என கோரிக்கை விடுத்தோம். அவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விரைவில் ஒப்புதல் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தன்னுடைய பரிசீலனையில் இருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் தெரிவித்தார். ஆளுநரை நாம் கட்டாயப்படுத்த முடியாது. எனவே விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com