“ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம்” - காவல்துறை

“ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம்” - காவல்துறை
“ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம்” - காவல்துறை

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனரை வைத்த ஜெயகோபாலை பிடிக்க காவல்துறையினர் எடுத்து வரும் முயற்சி குறித்து பரங்கிமலை இணை ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் விபத்துக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த பேனரை வைத்த ஜெயகோபால் மீது 308 பிரிவின் கீழ் பரங்கிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சுபஸ்ரீ இறந்து 13 நாட்கள் ஆகியும் பேனரை வைத்த ஜெயகோபால் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வை செய்யும் பரங்கிமலை இணை ஆணையர் கே.பிரபாகரன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’  நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தோம். இது தொடர்பான ஆணையை அவரது வீட்டிற்கு வெளியில் ஓட்டியுள்ளோம். அவரது வீட்டில் யாரும் இல்லாததால் ஆணையை வீட்டிற்கு வெளியில் ஓட்டியுள்ளோம்.

சுபஸ்ரீ மரணம் நடந்ததற்கு அடுத்த நாள் நாங்கள்  பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் சட்ட (Tamilnadu open places disfigurement act) பிரிவு 3ன்கீழ் அலட்சியமாக நடந்து கொண்டதற்காக வழக்குப்பதிவு செய்தோம். அதன்பின்னர் சுபஸ்ரீயின் உடலை பிரதே பரிசோதனை செய்து அவரது உறவினர்களுக்கு அளிக்கும் பணியில் இருந்தோம். 

ஜெயகோபால் தலைமறைவாக உள்ளார் என்று அறிவிக்க நிறைய சட்ட விதிமுறைகள் உள்ளன. ஏனென்றால் இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு அவரைத் தேட எங்களிடம் உள்ள அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்தவேண்டும்.

மேலும் ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் சிறப்பு படை காவல்துறையினர் கண்கானித்து வருகின்றனர். ஜெயகோபாலின் கைப்பேசி கடந்த 13ஆம் தேதி முதல் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரது நெருங்கிய உறவினர்கள் 12 பேரின் கைப்பேசியை நாங்கள் கண்கானித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com