ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் எழுச்சி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டக்களம் கண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இளைஞர்களின் போராட்டம் பல்கி பெருகிவருகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே 6 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரியும் , பீட்டா அமைப்பை தடை செய்யகோரி செங்கல்பட்டு சுற்று பகுதிகளான , கூடுவாஞ்சேரி , மறைமலைநகர் , தாம்பரம் , பொத்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதில் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ மாணவிகள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புக்களை புறக்கணித்து கல்லூரி வளாகத்தினுள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை முதலே திரண்ட மாணவர்கள் ஜல்லிகட்டை அனுமதிக்க கோரியும் பீட்டா அமைப்பை தடைச்செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலைமறியல் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் கல்லூரி மாணவ மாணவிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வ.உ.சி பூங்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 2500 க்கும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த தேசபந்து மைதானத்தில் குவிந்த விருதுநகர் மாவட்ட கல்லூரி மாணவர்கள் சார்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் மதுரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 7கிலோமீட்டர் தூரம் பேரணியாக நடந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பட்டதின்போது ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரியும்,பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தொடர் முழக்கமிட்டனர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.