"கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால்...”- எச்சரித்த கூட்டுறவு துறை செயலாளர்

"கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால்...”- எச்சரித்த கூட்டுறவு துறை செயலாளர்
"கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் தலையிட்டால்...”- எச்சரித்த கூட்டுறவு துறை செயலாளர்

“பொங்கல் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதுதொடர்பாக கண்காணிக்க, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். சீர்காழி அருகே கரும்பு கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டபின் அவர் இதை தெரிவித்தார்.

ஆய்வின் போது அவருடன் இருந்த மாவட்ட ஆட்சியர் லலிதா, “அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 13,500 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள செங்கரும்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள் கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் “கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன், “விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்” என தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள், தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள தங்களின் செங்கரும்புகளை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

ஆய்வின்போது ராதாகிருஷ்ணனுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில், “கடந்த மாதம் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32,533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 13,500 நிவாரணம் அறிவிக்கபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூ. 43.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை அடுத்த வாரம் வந்து சேரும். வந்ததும், பொங்கலுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கபடும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com