மேகதாது அணை விவகாரம் | ’முதல்வராக விஜய் இருக்கும்வரை நடக்காது..’ செங்கோட்டையன் சொன்னது என்ன?
காவிரி நீர்ப் பிரச்சனையில் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி கர்நாடகா ஜூன், ஜூலை மாத நீரை விட மறுக்கிறது. அதேசமயம் மேகதாது அணை திட்டத்தில் தீவிரம் காட்டுகிறது. ஆகஸ்ட் 3 அன்று பெங்களூருவில் நேரடி பேச்சுவார்த்தைக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார். இந்த நேரடி சந்திப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
செய்தியாளர் - M. மீரா
கர்நாடகா - தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. மற்றொருபுறம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தில் கர்நாடக அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தசூழலில் தான், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்திருக்கிறார்.
கோபிசெட்டிபாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் காவரி நதிநீர் பிரச்சனை வரும்போதெல்லாம் முதல்வரின் பிரதிநிதிகள் முதல்வரின் கடிதங்களுடன் கர்நாடகா செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேகதாது பிரச்சனை இருக்கும் போது முதல்வர் அங்கு சென்று கர்நாடக முதல்வரை சந்திப்பது பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் 100 சதவிதம் பின்னடைவாக இருக்காது தான் தமிழ்நாட்டை ஆளும் வரையில் மேகதாது அணைக்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க இயலாது என்று முதலமைச்சர் கூறியுள்ளார் மேலும் அதுதான் அவரின் கனவு என்றார்.

