ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகாராறில் பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் விழவைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓலைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து ஆடுமேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கு என்பவரும் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 8ந்தேதி பால்ராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய ஆடு, சிவசங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் சிவசங்கு, பால்ராஜை தாக்கி, சாதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. சிவசங்கு அடிக்க வரும் போது பால்ராஜ் தடுத்ததால் அந்தக் கம்பு சிவசங்கு மீது பட்டுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் சிலர் பால்ராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்து, தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி, பால்ராஜை காலில் விழ வைத்துள்ளனர். இது குறித்து கேள்விப்பட்டதும் பால்ராஜ் மகன் கருப்பசாமி விரைந்து சென்று தடுக்க முயன்றுள்ளார், அவரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகியதையடுத்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த பால்ராஜ் போலீசில் புகார் அளித்தார். மேலும், சிவசங்கு, அவரின் மகன், மகள் ஆகியோர் தன்னை மாறி மாறி அடித்து காலில் விழவைத்ததாகவும் பால்ராஜ் குற்றம் சாட்டிஉள்ளார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவசங்கு, சங்கிலி பாண்டியன், பெரிய மாரி, வீரய்யா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.