நீதித்துறை, அளுநர், ஆணையம், ஊடகம், வருமானவரித்துறை என ஜனநாயகத்தின் தூண்களை எல்லாம் தங்களின் அரசியலுக்கான ஏணி என்று பாரதிய ஜனதா கருதுவதாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் விமர்சித்துள்ளது.
சாமானியன் என்ற பெயரில் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், வருமானவரித்துறை பெண் அதிகாரி ஒருவர், தம்மை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தமிழக அமைச்சர்கள் மீது புகார் கொடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏழாம் தேதி நடைபெற்ற வருமானவரி சோதனைக்கு 12ம் தேதி புகார் அளித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எப்படி இட்டுக் கட்டி புகார் அளிப்பது என்கிற உத்தரவு மேலிடத்திலிருந்து வருவதற்காக 5 நாள் காத்திருந்தாரா என நமது எம்ஜிஆர் கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையமே, மத்திய அரசுடன் கலந்துபேசி ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கிற சூழ்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறை, பாரதிய ஜனதாவினர் நீட்டுகிற குச்சிக்கு, பல்டி அடிப்பதுதானே கடமையாக இருக்க முடியும் என நமது எம்ஜிஆர் விமர்சித்துள்ளது.
ஜனநாயகத்தின் மாண்புமிகு தூண்களையெல்லாம் தங்களின் அரசியலுக்கான ஏணி என கருதுகிறது காவிக் கட்சி என்றால், அது காந்தி தேசத்திற்கு போதாத காலம்தானே என்றும் நமது எம்ஜிஆர் கூறியுள்ளது.