``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு

``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர் கவாய் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இவ்வழக்கில், தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86,000 க்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளது போல அனைத்து மாநிலங்களும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய உணவு கிடைக்கும் வகையில் ரேஷன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

வழக்கின் முந்தைய விசாரணைகளின் போது கொரோனா காலகட்டத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பட்டியலில், பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பு `கேள்விக்குறியாகவே உள்ளது' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களின் தொழில் குறித்த தகவல்களை, மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் ரகசியமாக வைத்திருப்பது முக்கியம் என்று கூறி இருந்தனர். குறிப்பாக NACO (National AIDS Control Organisation) மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும் பாலியல் தொழிலாளர்களின் அடையாளத்தை தெரிவிக்காமல் மாநில அரசுகள் தொடர்ந்து ரேஷன் உணவுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மாநில சுகாதார அதிகாரியிடமிருந்தோ, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பிடமிருந்தோ சான்றிதழ் பெறும்பட்சத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தயாராக உள்ளதாக UIDAI (Unique Identification Authority of India) நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நாகேஸ்வரராக அமர்வு, `தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது’ எனவும் `அவர்களும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்கள் அனைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது என்ற அடிப்படையில், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. கொரோனா பாதிப்பின் போது இந்தியாவே 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீதிமன்றம் அறிகிறது. அதனடைபடையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினதவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இதனையடுத்து இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

- நிரஞ்சன்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com