நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவது விதிமீறல் இல்லையா? – நீதிமன்றம்

நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவது விதிமீறல் இல்லையா? – நீதிமன்றம்
நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவது விதிமீறல் இல்லையா? – நீதிமன்றம்

வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அது விதிமீறல் இல்லையா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'வாகனங்களில் எண் பலகை பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்காக வைக்கப்படுகிறது. இந்த எண் பலகையின் அளவு, எண்களின் அளவு உட்பட இது தொடர்பாக இந்திய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 50,51 பல்வேறு வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது.

ஆனால், இவற்றை மீறும் விதமாக கரூர் மாவட்டத்தில், ஏராளமான வாகனங்களில் எண் பலகையில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் முறையாக சோதனை செய்யபடுவதில்லை. இவை பல நேரங்களில் சட்டவிரோத செயல்களுக்கும் வாய்ப்பளிக்கின்றன.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இந்திய மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 50,51ஐ மீறும் வகையில், வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, 'வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? அது விதிமீறல் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து, வாகன எண் பலகையில் அரசியல் கட்சித்தலைவர் படங்களை ஒட்டுவது உள்ளிட்ட மோட்டார் வாகன விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதிகளவில் அபராதங்களை விதிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com