இறையூர் சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன? - சமூக நீதி கண்காணிப்புக் குழு அதிரடி ஆய்வு

இறையூர் சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன? - சமூக நீதி கண்காணிப்புக் குழு அதிரடி ஆய்வு
இறையூர் சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன? - சமூக நீதி கண்காணிப்புக் குழு அதிரடி ஆய்வு

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஜாதிய வன்கொடுமையின் வெளிப்பாடாக தெரிகிறது என சமூக நீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர் சாமிநாதன் தேவதாஸ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தனர். இதில், சமூக நீதி கண்காணிப்பு துணை குழுவைச் சேர்ந்த முனைவர் சாமிநாதன், ராஜேந்திரன், கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரன் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவினர் இன்று சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.

இதன் பின்னர் வெள்ளலூர் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்தக் குழுவைச் சேர்ந்த சாமிநாதன் கூறுகையில்...

இறையூர் கிராமத்தில் ஜாதிய வன்கொடுமைகள் இருந்ததன் வெளிப்பாடாகத்தான் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இக்கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் வழிபடுவதில் ஜாதிய பாகுபாடு இருந்துள்ளது, இரட்டை குவளை முறை நடைமுறையில் இருந்துள்ளது, அவையெல்லாம் இந்த கிராமத்தில் தீண்டாமை இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

மனித சமூகத்தில் இதுபோன்ற செயல் நடைபெறக் கூடாது என்பதே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக உள்ளது, இந்த செயலை யார் செய்தது என்பதை கண்டறிய புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது, குற்றவாளிகள் இறுதி செய்யப்பட்டு விட்டார்கள் என்று வரும் செய்திகள் வதந்தி மட்டுமே, இதில் ஆதாரப்பூர்வமாக குற்றவாளியை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது,

இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது, காவல் துறையினர் மீது குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த விவகாரத்தில் எங்களது ஆய்வு முடிந்த பின்பு ஆட்சியரோடு கலந்து ஆலோசனை செய்த பின்பு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்,

இது போன்ற நிகழ்வுகள் இனி வேறு எந்த பகுதியில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல பொதுமயானம் பொது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எல்லா கிராமங்களிலும் அமைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் அது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம், ஒரு சம்பவம் நடக்கும்போது அனைத்து தரப்பு மக்களையும் விசாரணைக்கு போலீசார் உட்படுத்த தான் செய்வார்கள், அது அந்தப் பகுதி மக்களுக்கு இடையூறாக தெரியலாம் ஆனால், உண்மை குற்றவாளிகளை அப்போதுதான் கண்டறிய முடியும்,

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் பெற்று தரவும் வழிவகை செய்யப்படும். எந்த வழக்காக இருந்தாலும் காவல் துறையினருக்கு அழுத்தம் வரும் அதே போல் தான் இந்த வழக்கிலும் காவல் துறையினருக்கு அழுத்தம் வந்திருக்கலாம். அதனையும் கடந்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட அரசு வழிவகை செய்துள்ளது,

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் முறையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்று சாமிநாதன் தேவதாஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com