"சிபிஐ வழக்குகளில் ஏன் விடுவிப்பு அதிகமாக இருக்கிறது?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !

"சிபிஐ வழக்குகளில் ஏன் விடுவிப்பு அதிகமாக இருக்கிறது?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !
"சிபிஐ வழக்குகளில் ஏன் விடுவிப்பு அதிகமாக இருக்கிறது?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி !

சிபிஐ தன்னுடைய விசாரணையில் புதிய யுக்திளையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வர வேண்டும் அதற்கு கூடுதலானவர்களை பணியமர்த்த வேண்டும் என்று சென்னை உயரீநீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரனும் புகழேந்தியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த சஞ்சீவிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதில், "ராமநாதபுரத்தில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக தெரிவித்தனர். இதை அடுத்து பலர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதற்கு உடன்படிக்கை பத்திரம் நிறுவனத்தினால் கொடுக்கப்பட்டது. ஒரு ஆண்டு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

இந்நிலையில், வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீசார், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை சரிவர நடத்த வில்லை எனவே இந்த வழக்கை சிபிஐ-டம் மாற்ற வேண்டும் மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து வழக்கு விசாரணையை கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் 9 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த வழக்கை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் கூறும் போது அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் சிபிஐ அதிகாரிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ தரப்பில் மத்திய தேர்வு பணியாளர் ஆணையம் மூலம் சிபிஐ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து,

1) கடந்த 20 ஆண்டுகளில் சிபிஐக்கு எத்தனை வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது? இதில் சிபிஐ எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.

2) சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுள்ளனர்? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்? மொத்த அடிப்படையில் எத்தனை சதவீதம்

3) சிபிஐயில் எத்தனை நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்?

4) சிபிஐ அதிகமான ஆட்கள் எடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

5) சிபிஐ-க்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் விசாரணையில் போதும் சிபிஐ விசாரிக்கும் வழக்குகளில் ஏன் விடுவிப்பு அதிக அளவில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அது தொடர்பான போபால் விஷவாயு வழக்கு, 2ஜி வழக்கு, போபர்ஸ் ஊழல் வழக்கு உள்ளிட்டவற்றை பட்டியலிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com