\
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ எடுத்தவர் ஆஜர்; செல்போன் ஒப்படைப்பு

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ எடுத்தவர் ஆஜர்; செல்போன் ஒப்படைப்பு

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: வீடியோ எடுத்தவர் ஆஜர்; செல்போன் ஒப்படைப்பு
Published on

தஞ்சை அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய காணொளி அடங்கிய செல்போன் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவியொருவர் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்திருந்தார். இதில் மாணவியை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்தாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

மேலும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டது. மேலும், தஞ்சை நீதிமன்றத்தில், நீதிபதி முன்பாக பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்றும், அதனை சீலிடப்பட்ட உறையில் வைத்து ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த ஞாயிறன்று மாணவியின் பெற்றோர் தஞ்சையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்ததாக கூறப்படும் காணொளி உண்மையானதுதானா என்பதை கண்டறிய தடயவியல் பரிசோதனையில் உறுதிபடுத்த வேண்டியிருப்பதாகவும், எனவே அந்த காணொளியை பதிவு செய்த முத்துவேல் என்பவர் வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி தனது செல்போனை வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி வல்லம் டிஎஸ்பி பிருந்தாவிடம் அந்த செல்போன் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. முத்துவேல் என்பவர், நேரில் ஆஜராகி தனது செல்போனை ஒப்படைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com