இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் நகை, பணத்தை ஏமாற்றிய வாலிபர்..!
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியை ஏமாற்றி பணம், நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் மகாலிங்கம் சாலையைச் சேர்ந்தவர் விக்னேஷ்(21). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் விக்னேஷ் அந்த மாணவியிடம், “எனக்கு பணக் கஷ்டம் உள்ளது. எனவே நீ எனக்கு பணம் மற்றும் நகை கொடுத்து உதவ வேண்டும்” என்று கேட்டு உள்ளார். இதையடுத்து அந்த கல்லூரி மாணவி தன்னிடம் இருந்த பணத்தையும் தான் அணிந்திருந்த நகையையும் கொடுத்து உதவியுள்ளார். ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில் , விக்னேஷ் அந்த நகை மற்றும் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக கல்லூரி மாணவி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் இடம் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் அந்த மாணவியிடம் நகை , பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்ற முயன்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.