அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு : சுகாதாரத்துறை செயலர் உறுதி
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள தீத்தடுப்பு சாதனங்கள் காலாவதியானதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆறு தளங்களில் செயல்பட்டு வரும் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பல்வேறு உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த தீத்தடுப்பு கருவிகள் கடந்த பிப்ரவரி மாதமே காலாவதியான நிலையில், அவை மாற்றப்படாமல் இருந்தன. இதுகுறித்து புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பானதை அடுத்து, 6 தளங்களிலும் வைக்கப்பட்டிருந்த காலாவதியான கருவிகளை அகற்றிய ஊழியர்கள், புதிய கருவிகளைப் பொருத்தினர். உரிய விசாரணை நடத்தப்பட்ட பின் கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை இயக்குநர் நாரயணபாபு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.