கிராமத்தினர் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு.! கடலூரில் அதிர்ச்சி
கடலூர் அருகே கிராம மக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பொன்னால்லகரம் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பில், காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை குடிநீருக்காக அப்பகுதி மக்கள் காத்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது குடிநீர் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிறத்தில் வருவது தெரிந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதிவாசி ஒருவர், யாரும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் சோதனை செய்ததில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. நீரில் ஏன் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது. ஏதும் தனிநபர் விரோதமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது.