முக்கிய ஆவணங்கள் இன்றி வாழும் முறைசாரா குப்பை சேகரிப்பவர்கள்.. ஆய்வில் வெளிவந்த தகவல்
மறுசுழற்சி குப்பைகளை கையாள்வதில் முறை சாராத குப்பை எடுப்பவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வீதிகள், சாலைகள் மற்றும் குப்பை கொட்டும் இடங்களில் இருந்து மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிக்கும் பணியை செய்யும் இவர்கள், மறுசுழற்சி குப்பைகளை வாங்கும் வியாபாரிகளிடம் ஒப்படைத்து அதற்கான பணத்தை பெறுகிறார்கள். இவ்வாறு அன்றாட வாழ்க்கையை கடத்தும் முறைசாரா குப்பை சேகரிப்பவர்களின் நிலையை அறிந்து கொள்ளும் வகையில் "ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா" என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 8000க்கும் மேற்பட்ட முறைசாரா குப்பை சேகரிப்போரின் வாழ்வாதாரத்தை தரவுகளாக ஆய்வு செய்துள்ளது.
இதன்படி, முறைசாரா குப்பை சேகரிப்பவர்களில் 48% பேருக்கு மட்டுமே சொந்தமாக சிறு அளவில் வீடு உள்ளது. 10% மக்கள் தெருக்களில், 10% மக்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளிலும் வசிக்கின்றனர். குப்பை சேகரிப்பவர்கள் 82% மக்கள் தனிக்குடித்தனம் செய்பவர்களே. ஆண்களை விட பெண்களே அதாவது 55% மேல் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற அரசு வழங்கிய அத்தியாவசிய அடையாள ஆவணங்களை வைத்திருந்தாலும், 34% பேர் மட்டுமே பான் கார்டுகளை வைத்துள்ளனர். 32% பேர் சாதி சான்றிதழ்களையும்,16% பேர் நலத்திட்ட அட்டைகளையும் வைத்திருக்கிறார்கள். இவர்களில் 88% பேருக்கு அடிப்படையான அரசு நலத்திட்டங்களைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
முறைசாரா குப்பை சேகரிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களை இணைப்பது அவசியம் என தன்னார்வ நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், "மறுசுழற்சி பாதுகாவலர்கள்" என்று அவர்கள் அடையாளப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.