
இந்தியாவில் வழக்கமாக நவம்பர் மாதத்தில் குளிர்ந்த சூழலே காணப்படும். ஆனால், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தை பொறுத்தவரை சற்று வெப்பம் அதிகமான மாதமாக இருக்கும் என்பது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு. பூமத்திய ரேகை பசிபின் கடலில் எல்நினோ எனப்படும் காலநிலை தாக்கம் இருக்கிறது.
எல் நினோ என்பது தென் அமெரிக்காவை ஒட்டிய பசிபிக்கடல் பகுதியில் கடல் நீரின் வெப்பத்தை அதிகரிக்கும் காலநிலை தாக்கம். இதனால் பருவகால காற்று பலவீனமடையும். இந்தியாவில் வறண்ட வானிலை ஏற்பட இதுவே காரணமாகிறது. மேலும் POSITIVE INDIAN OCEAN DIPOLE என்ற இந்திய பெருங்கடலின் மீதான நேர்மறை காற்றலைவு நிலவுகிறது. POSITIVE INDIAN OCEAN DIPOLE என்பது இந்திய பெருங்கடலின் மேற்குப் பகுதிகளுக்கும், கிழக்குப் பகுதிகளுக்கும் இடையே உள்ள வெப்ப வேறுபாடு ஆகும்.
இதுபோன்ற தாக்கங்களால் இந்தியாவின் பல பகுதிகளில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளை தவிர்த்து, பிற பகுதிகளில் வழக்கத்தைவிட குறைந்த வெப்பநிலை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆறாவது முறையாக இந்த அக்டோபர் மாதத்தில்தான் நாட்டின் தென்பகுதிகளில் மிகவும் குறைவான மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில் நாட்டின் தென் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வழக்கத்தை விட கூடுதலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவான அளவு மழை பதிவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த பருவகாலம் வரை எல்நினோ தாக்கம் நீடிக்கக் கூடும் என்பதும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பாக இருக்கிறது.