மதுரை முனியாண்டி கோயில் திருவிழா - 2500 கிலோ பிரியாணி பக்தர்களுக்கு விநியோகம்

மதுரை முனியாண்டி கோயில் திருவிழா - 2500 கிலோ பிரியாணி பக்தர்களுக்கு விநியோகம்
மதுரை முனியாண்டி கோயில் திருவிழா - 2500 கிலோ பிரியாணி பக்தர்களுக்கு விநியோகம்

மதுரை கள்ளிக்குடி அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் 2500 கிலோ பிரியாணி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 

மதுரை, திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 86-வது ஆண்டாக இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டு, பால்குடம் எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் விடுதிகள் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பக்தர்கள் கூறும் போது, “ முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு, அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி, மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும்.

இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இந்தத் திருவிழாவிற்கு வருகை தருவார்கள். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com