‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்

‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்
‘அயன்’ பட பாணியில் நகைகளை மறைத்த கள்ளக்காதல் ஜோடி : 200 பவுன் நகை மாயம்

ரூ.2 கோடி நகை கொள்ளை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைதான நிலையில், கொள்ளைபோன நகையில், 200 பவுன் நகை மாயமாகி உள்ளது. 

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் மினி நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 803 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கோவை போத்தனூரை சேர்ந்த பெண் ஊழியர் ரேணுகா தேவியும் சத்தியமங்கலத்தை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் சுரேஷும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டனர் என்பதையும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

ரேணுகா தேவியின் கணவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சுரேஷுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். ரேணுகா தேவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு ‘சிம்கார்டு’ வாங்க வந்த சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது. 

பட்டதாரியான சுரேஷ் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. வட்டி கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாமலும் திணறி வந்துள்ளார்.

இதனிடையே ரேணுகா தேவி முத்தூட் மினி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததை பயன்படுத்தி அங்கு நகைகளை கொள்ளையடித்தால் கடனை அடைத்து விடலாம் என்ற விபரீத எண்ணம் சுரேஷுக்கு தோன்றியுள்ளது. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை உன் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி ரேணுகாதேவியையும் திட்டத்திற்கு பணிய வைத்துள்ளார் சுரேஷ். 

அதன்படி மதியம் 2 மணி அளவில் ரேணுகாதேவியும் அவருடன் பணிபுரியும் மற்றொரு பெண்ணான திவ்யாவும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திவ்யாவிற்கு தெரியாமல் அவரது சாப்பாட்டில் ரேணுகாதேவி மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் திவ்யாவுக்கு சிறிது மயக்கம் ஏற்பட்டது. உடனே ரேணுகா தேவி காபி வாங்கி கொடுத்து அதிலும் மயக்க மருந்தை கலந்துள்ளார்.

திவ்யா மயங்கியதும் ரேணுகா தேவி தனது செல்போனில் இருந்து கள்ளக்காதலன் சுரேசுக்கு, திவ்யா மயக்கத்தில் இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் ‘பூனை பால் குடிச்சிருச்சு, பூனை தூங்கிடுச்சு’ என மெசேஜ் அனுப்பியுள்ளார். அதைப்பார்த்த பின்னர்தான் சுரேஷ் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்து திட்டமிட்டபடி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சுரேசின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அவரது தந்தை நடத்தி வரும் நகைபட்டறையில் யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்த நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றியுள்ளார். பின்னர் அவற்றை அயன் படத்தில் வரும் காட்சிகள் போன்று சாமி படங்களுக்குள்ளும், குளியல் அறையில் உள்ள சுவிட்ச்-பாக்சுக்குள்ளும் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் கோவை வந்து கொள்ளை நாடகத்தில் காயம் அடைந்ததுபோல் நாடகம் ஆடியதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காதலி ரேணுகாதேவியை சந்தித்து நகையை விற்று ரூ.1 கோடியை சுரேஷ் எடுத்துக்கொள்வதாகவும், ரூ.50 லட்சத்தை கள்ளக்காதலிக்கு கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

ஆனால் சம்பவ இடத்தில் விசாரித்த போலீசாருக்கு ரேணுகாதேவியின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை சேகரித்து விசாரித்தபோது அவர் தனது கள்ளக்காதலன் சுரேசுடன் ரேணுகா சிக்கிவிட்டார். 

உடனே சுரேசை கைது செய்த போலீசார் ஈரோடு அழைத்து சென்று அவரது வீட்டில் இருந்து 600 பவுன் எடை கொண்ட தங்ககட்டிகளை மீட்டனர். நிதிநிறுவனத்தில் இருந்து 803 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுத்திருந்த நிலையில் 200 பவுன் நகை மாயமாகியுள்ளது. எனவே மீதி தங்க கட்டிகள் எங்கே? என்ற குழப்பம் நிலவுகிறது. 200 பவுன் எடை கொண்ட தங்க கட்டிகளை சுரேஷ் மறைத்து வைத்து நாடகமாடுகிறாரா? என்பதை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த சுரேஷ், போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி? என்ற விவரங்களை அவர் இணையதளத்தில் பார்த்து தகவல்களை சேகரித்துள்ளார். கொள்ளையடிக்க செல்லும்போது மோட்டார் சைக்கிளில் சென்றால் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் எளிதில் சிக்கி கொள்வோம் என்பதை தெரிந்து கொண்ட அவர் வீட்டில் இருந்து பஸ்சிலேயே நிதி நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.

சுரேஷ் கொள்ளையடிக்க சென்ற போது அணிந்திருந்த உடை, தொப்பி, கைக்குட்டை, செருப்பு அனைத்தையும் கோவை வாலாங்குளத்துக்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com